flashvortex

Sunday, November 27, 2011

கிரண் பேடி மீது வழக்கு பதிய டெல்லி கோர்ட் உத்தரவு: நிதி முறைகேடு, மோசடியில் ஈடுபட்டதாக புகார்


தொண்டு நிறுவனத்துக்கு முறைகேடாக நிதி சேகரித்தது தொடர்பாக, அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியுமான கிரண் பேடி மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி, டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவர், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடி. ஊழலுக்கு எதிரான, லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக, அன்னா ஹசாரேயுடன் இணைந்து, இவர் போராட்டம் நடத்தி வருகிறார். அரசு சார்பில் அளிக்கப்பட்ட விமானப் பயண கட்டணச் சலுகையை முறைகேடாக பயன்படுத்தியதாக, கிரண் பேடி மீது ஏற்கனவே ஒரு புகார் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், கிரண் பேடிக்கு எதிராக மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. டில்லியைச் சேர்ந்த தேவிந்தர் சிங் சவுகான் என்ற வழக்கறிஞர், டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கிரண் பேடிக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகளை அவர் தெரிவித்திருந்தார்.

அதில் கூறப்பட்டிருந்ததாவது: ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையினரின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு, தான் நடத்தி வரும், "இந்தியா விஷன்' என்ற தொண்டு நிறுவனம் சார்பில், இலவச கம்ப்யூட்டர் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி வழங்குவதாகவும் கூறி, மைக்ரோ சாப்ட் நிறுவனத்திடம் இருந்து, 50 லட்சம் ரூபாயை நன்கொடையாக, கிரண் பேடி பெற்றுள்ளார். ஆனால், சில நபர்களுடன் சேர்ந்து கொண்டு, இந்த விஷயத்தில் அவர் மோசடி செய்துள்ளார். இலவச பயிற்சி அளிப்பதற்கு பதிலாக, பாதுகாப்பு படையினருக்காக அமைக்கப்பட்ட பயிற்சி மையங்களில் இருந்து, தலா 20 ஆயிரம் ரூபாய் வசூலிக்க திட்டமிட்டார். இந்த விஷயத்தில், வேதாந்தா அறக்கட்டளை அமைப்பையும் அவர் ஏமாற்றினார்.

வேதாந்தா அறக்கட்டளையுடன் நன்கொடை ஒப்பந்தம் செய்து கொண்டார். பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான நிலம் மற்றும் மின் கட்டணத்தை தானே செலுத்துவதாகக் கூறி, அதற்காக வேதாந்தா அமைப்பிடம் தலா 6,000 ரூபாய் பெறுவதற்காக, இந்த ஒப்பந்தத்தை கிரண் பேடி செய்து கொண்டார். ஆனால், பயிற்சி மையத்துக்கான நிலம் மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை, போலீஸ் அமைப்புகள் மூலமாகவே அவர் பெற்றுக் கொண்டார்.கிரண் பேடிக்கு சொந்தமான, "இந்தியா விஷன்' மற்றும் "நவ்ஜோதி' ஆகிய இரு அறக்கட்டளைகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து பெரிய அளவில் நன்கொடை பெறப்பட்டுள்ளது. எனவே, நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கணக்கில் முறைகேடு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், கிரண் பேடி மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி கூடுதல் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிபதி அமித் பன்சால், கிரண் பேடி மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் படி, டில்லி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

கிரண் பேடி,மாஜி போலீஸ் அதிகாரி:எனக்கு எதிராக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கை எனக்கு ஆச்சர்யம் எதையும் ஏற்படுத்தவில்லை. இந்த உத்தரவு, ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கு எனக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுத்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons