flashvortex

Friday, November 25, 2011

எகிப்தில் தேர்தல் நடத்துவதாக அறிவித்துள்ள ராணுவ அரசை எதிர்த்து, போராட்டம் தீவிரம்!


எகிப்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடத்துவதாக அறிவித்துள்ள ராணுவ அரசை எதிர்த்து, போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

எகிப்தில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக், மக்களால் விரட்டப்பட்ட பின், தற்காலிக ஆட்சிப் பொறுப்பேற்ற ராணுவ உயர்மட்ட கவுன்சில், ஆறு மாதங்களுக்குள், பார்லிமென்ட் தேர்தல் நடத்துவதாக வாக்களித்தது. ஆனால், பார்லி தேர்தல் உட்பட, கவுன்சில் சொன்ன எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, ராணுவ ஆட்சிக்கு எதிராக, மக்கள் கடந்த நான்கு நாட்களாக, போராட்டம் நடத்தி வருகின்றனர். தாரிர் சதுக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. இதே போன்ற ஆர்ப்பாட்டம், அலெக்சாண்டிரியா மற்றும் சூயஸ் நகரங்களிலும் நடந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்தினர்.

இதில், 30 பேர் பலியாகினர்; 1,700 பேர் காயமடைந்தனர். எகிப்தில் பொதுத் தேர்தலை, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்படும் என, ராணுவ உயர்மட்ட கவுன்சில் உறுதியளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை, ராணுவ உயர்மட்ட கவுன்சில் தலைவர் முகமது உசைன் தந்தாவி வெளியிட்டார். கெய்ரோவின் தாரிர் சதுக்கத்தில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கூடி தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால பிரதமர் எசம் ஷரப் மற்றும் அவரது அமைச்சரவையினர், ராணுவ உயர்மட்ட கவுன்சிலிடம் தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். இவர்களது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. இருப்பினும், ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம், எகிப்தின் பல நகரங்களிலும் தீவிரமடைந்து வருகிறது.

மீண்டும் ஏமாற்றினார் சச்சின்


நீண்ட நெடுங்காலமாக சதத்தில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் இம்முறையும் ரசிகர்களை ஏமாற்றியுள்ளார்.இந்திய, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நான்காம் நாளான இன்று, நேற்றைய 67 ஓட்டங்களுடன் ஆட்டத்தை துவக்கிய சச்சின் டெண்டுல்கர் நிதானமாக ஓட்டங்களை சேர்த்து வந்தார்.

அவர் 90 ஓட்டங்களை கடந்தவுடன் எப்படியும் சதமடிப்பார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். இருப்பினும் 94 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரவி ராம்பால் பந்து வீச்சில், மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் சமியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் சதத்தில் சதமடிப்பார் என்று எதிர்பார்த்த துடுப்பாட்ட ரசிகர்களை அவர் மீண்டும் ஏமாற்றியுள்ளார்.

இறுதிக்கட்ட போரின் போது இறந்தவர்களை கணக்கிடும் பாதுகாப்பு அமைச்சு


இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்த விபரம் விரைவில் வெளியிடப்படும் என்றும் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது யுத்தக் குற்றம் புரிந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இதேவேளை, இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவ நடவடிக்கைகளால் சிறிய தொகுதி பொது மக்களே உயிரிழந்ததாக பாதுகாப்புச் செயலாளர் வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூறியுள்ளார்.

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் சுமார் 40000 பொது மக்கள் கொலை செய்யப்பட்டதாக ஐநா நிபுணர் குழு அறிக்கை தெரிவிக்கின்றது.

அரச படைகளின் எரிகணைத் தாக்குதலுக்கு இலக்காகியே அதிக பொது மக்கள் உயிரிழந்ததாக ஐநா நிபுணர் குழு அறிக்கை குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த அறிக்கையை கொண்டு சர்வதேச போர் குற்ற விசாரணை ஒன்றை நடத்துமாறு சர்வதேச நாடுகள் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கல்வி, நட்புறவு நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, இறுதிக் கட்ட யுத்தத்தில் சிறிய தொகுதி பொது மக்களே உயிரிழந்ததாகக் கூறியுள்ளார்.

யுத்தத்தின் போது காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பில் தகவல் திரட்டப்படுவதாகத் தெரிவித்த அவர், 30 வருடங்களின் பின் மேற்கொள்ளப்படும் சனத்தொகை மதிப்பீட்டின் ஊடாக அது கணிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சின் முன்னால் முதற்பெண்மணி மரணம்.


பிரான்சின் காலஞ்சென்ற முன்னால் ஜனாதிபதியான François Mitterrand இன் மனைவி Danielle Mitterand திங்கள் இரவு காலமாகியுள்ளார். இவருக்கு வயது 87. பரிசின் Hôpital Georges-Pompidou இல் வெள்ளிக்கிழைம அனுமதிக்கப்பட்ட இவர் ஞாயிற்றுக்கிழமை செயற்கை மயக்க நிலையில் (coma artificiel) வைக்கப்பட்டிருந்தார்.

இவரின் சமூக நல சேவைகளினால் இவர் மிகவும் பிரபலமடைந்திருந்தார். ஜனாதிபதியின் துணைவியார் என்பதால் மட்டுமல்ல இவரது பொது நலத் தொண்டுகளாலும் இவர் முதற்பெண்மணியாகவே திகழ்ந்தார் என அரசியற் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இவர் 1986ம் ஆண்டில் «France libertés» எனும் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் மூலம் உலகின் பல நாடுகளில் வறுமையிலிருந்த மக்களுக்கான சத்துணவு மற்றும் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றினார். உலகின் பிணக்குகள் உள்ள நாடுகளில் தன்னால் இயன்ற அமைதிப் பணிகளையும் மேற்கொண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. «un monde plus juste» எனும் கொள்கையை இவரது தொண்டு நிறுவனம் தாரகமந்திரமாகக் கொண்டு இயங்கியது.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons