இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும். சக இந்திய வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக டெஸ்ட் போட்டிகளில் உலகில் இரண்டாவது அதிக ரன் குவித்தவருமான ராகுல் திராவிட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
பெங்களூரில் வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்த திராவிட் சர்வதேசப் போட்டிகள், உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகள் ஆகியவற்றிலிருந்து தான் ஓய்வு பெறுவதாகக் கூறினார்.
திராவிட்டின் சாதனைகள்
டெஸ்ட் போட்டிகளில் உலகிலேயே அதிக கேட்சுகளைப் பிடித்தவர் என்ற சாதனைக்கும் இவரே சொந்தக்காரர். விக்கெட் கீப்பராக இல்லாமல் ஃபீல்டராக இருந்தபடியே டெஸ்டில் மொத்தம் 210 கேட்சுகளை இவர் பிடித்துள்ளார்.1996 இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கியவர் திராவிட். 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,288 ரன்களை திராவிட் எடுத்துள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 36 சதங்களையும் அடித்துள்ளார்.
மிக நேர்த்தியாக தடுத்தாடக்கூடியவர், இவரை அவுட்டாக்குவது கடினம் என்பதால், இவருக்கு பெயரே தி வால், அதாவது 'சுவர்' என்றானது.
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இவர் கடந்த செப்டம்பரில் ஓய்வுபெற்றிருந்தார்.
கிரிக்கெட்டின் அந்த வடிவத்திலும் உலகின் முன்னணி ரன் குவிப்பாளர்களில் ஒருவர் திராவிட். 344 ஆட்டங்களில் விளையாடி, 12 சதங்களை அடித்து, மொத்தத்தில் 10,889 ரன்களை அவர் எடுத்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 196 கேட்சுகளைப் பிடித்திருப்பவர் இவர்.
சர்வதேச டுவெண்டி டுவெண்டி ஆட்டங்கள் என்று எடுத்துக்கொண்டால், இவர் ஒரேயொரு ஆட்டத்தைத்தான் விளையாடியுள்ளார்.
சுமார் இரண்டு வருட காலம் இந்திய அணியின் தலைவராக விளங்கி 25 டெஸ்ட் போட்டிகளிலும் 79 ஒரு நாள் போட்டிகளிலும் திராவிட் கேப்டனாக இருந்துள்ளார்.
இவரது தலைமையின் கீழ் மேற்கிந்தியத் தீவுகளிலும் இங்கிலாந்திலும் இந்தியா டெஸ்ட் தொடர்களை வென்றிருந்தது.
இந்திய கிரிக்கெட்டின் முன்னணி நட்சத்திரமாக டெண்டுல்கர் மின்னிய அதேநேரத்தில் ராகுல் திராவிட் தனக்கேயுரிய தனி பாணியில் சத்தமில்லாமல் சாதனைகளைச் செய்துவந்துள்ளார் என்று கூறவேண்டும்.
சச்சின் கருத்து
திராவிட்டுக்கு சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். அவரைப் போன்ற ஒரு கிரிக்கெட் வீரரை, அணியின் சக வீரரை, உற்ற தோழனைக் காணமுடியாது என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்தியா படுதோல்வி அடைந்ததற்கும் ஓய்வு பெறும் தனது முடிவுக்கும் இடையில் நேரடித் தொடர்பு இல்லை. இந்தியா ஆஸ்திரேலியாவில் வென்றிருந்தாலும்கூட தான் இந்த முடிவையே எடுத்திருப்பேன் என திராவிட் குறிப்பிட்டுள்ளார்.
திராவிட் ஓய்வுபெற்றுள்ள நிலையில், இந்திய அணியில் இருக்கக்கூடிய மற்ற இரண்டு மூத்த வீரர்களான சச்சின் டெண்டுல்கரும், விவிஎக்ஸ் லக்ஷ்மணும் கூட சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வுபெறலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.




6:55 AM
jana

Posted in: 

0 comments:
Post a Comment