2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடரில் தான் விளையாடுவதாக இருந்தால் அடுத்த வருடத்துடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறக்கூடும் என இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மஹேந்திரசிங் டோனி கூறியுள்ளார்.'2015 ஆம் ஆண்டு (உலகக் கிண்ண) போட்டிகளில் நான் விளையாடுவதாக இருந்தால் மற்றைய வகைப் போட்டியிலிருந்து நான் ஓய்வுபெற வேண்டியிருக்கும்' என அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது டோனி கூறினார்.
30 வயதான டோனி, இதுவரை 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் தலைமையில் இந்திய அணி விளையாடிய 36 டெஸ்ட் போட்டிகளில் 17 போட்டிகளில் அவ்வணி வெற்றியீட்டியுள்ளது.
2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளில் தான் பங்குபற்ற முடியுமா என்பதை 2013 ஆம் ஆண்டு தீர்மானிக்கவுள்ளதாக டோனி ஏற்கெனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டுக்காக இத்தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளாகவும் அவர் தெரிவித்திருந்தார். '2015 உலகக்கிண்ணப் போட்டிகளில் எனக்கு பதிலாக விளையாடுபவர் அதற்கு குறைந்தபட்சம் 70-80 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலாவது விளையாட வாய்ப்பு கிடைக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட நிலைப்பாடு' என டோனி கூறினார்.
ஒருநாள் போட்டிகளில் சிறந்த அணித்தலைவராகவும் சிறந்த துடுப்பாட்ட வீராகவும் டோனி கருதப்படுகிறார். எனினும் டெஸ்ட் போட்டிகளில் அவர் தலைமையிலான இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றி பெறுவதற்கு திணறுகின்றமை குறிப்பிடத்தக்கது.




7:04 PM
jana

Posted in: 

0 comments:
Post a Comment