flashvortex

Friday, February 3, 2012

இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தின் கூட்டு முயற்சி பலனளிக்குமா?

இலங்கைக்கு எதிரான இந்தியாவின் ஆதரவை பெறும் நோக்கில் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹய்ம் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ளார். 

ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19-வது கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மேற்கத்தேய நாடுகள் இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் அவரது விஜயம் அமைந்துள்ளது. 

அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்படவுள்ள இத்தீர்மானம் குறித்து அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு கடந்த வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்தியிருந்தார். அத்துடன் இவ்விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக வெளிவிவகார அமைச் சர் ஜி.எல்.பீரிஸை அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அழைப்பும் விடுத்திருந்தார்.

இதனிடையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான இத்தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவு வழங்குவதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதேவேளை இத்தீர்மானம் தொடர்பில் இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் மேற்கத்தேய நாடுகள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் ஒரு கட்டமாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹய்ம் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளருடன் எரிக் சொல்ஹய்ம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் அமெரிக்கத் தரப்பிலும் சில உயர்மட்ட அதிகாரிகள் புதுடெல்லிக்கு விஜயம் செய்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை இந்தியாவின் ஆதரவைத் தக்கவைப்பதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் இறங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த மாதம் 24ஆம் திகதி புதுடில்லிக்கு குறுகிய பயணம் ஒன்றை மேற் கொண்டிருந்தார்.

அத்துடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள  கோத்தபாய ராஜபக்ஷ­ ஜெனிவா தீர்மானம் குறித்து இந்திய உயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு இந்தியா ஆதரவு வழங்குமானால் அது இலங்கை அரசாங்கத்துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமையும் எனக் கருதப்படுகிறது.

அதே வேளை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விஷேட தூது வர் ஸ்ரிபன் ரப் இலங்கைக்கான உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல  அப்பாவி தமிழ் உயிர்களை காவு கொள்ள இலங்கை அரசுடன் இணைந்து பங்களிப்பு வழங்கிய இந்தியா எனியாவது மனச்சாட்சிபடி தமிழ் சமூகத்திற்கு ஆதரவு குரல் கொடுக்குமா? காலம்  தான் பதில் சொல்லும்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons