அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வைத்திருக்கின்ற நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்துகொண்டுள்ளது.
சுமார் 100 கோடி டாலர்கள் பெறுமதியான இந்த ரஷ்யத் தயாரிப்புக் கப்பலை இந்தியக் கடற்படை அடுத்த 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கியுள்ளது.
இப்போது அணுசக்தி-நீர்மூழ்கிக் கப்பலை வைத்திருக்கின்ற சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துகொண்டுள்ளது.முன்னதாக,சோவியத் தயாரிப்பு- நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியா 1991ம் ஆண்டுவரை பயிற்சித் தேவைகளுக்காக வைத்திருந்தது.
8,140 தொன் எடையிலான அக்குலா II வகையைச் சேர்ந்த இந்தக் கப்பல் ரஷ்யாவில் கே-152 நேர்பா என்ற பெயரில் உருவாக்கப்பட்டது: இப்போது இந்தியா அதற்கு ஐஎன்எஸ் சக்ரா IIஎன்று பெயரிட்டுள்ளது.
விசாகபட்டிணத்தில் நடந்த வைபவத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோனி, இந்தக் கப்பலை உத்தியோகபூர்வமாக கடற்படையிடம் கையளித்தார்.
கேப்டன் பி. அசோகன் தலைமையிலான 80 கடற்படை வீரர்கள் இந்தக் கப்பலில் பணியில் இருப்பார்கள்.
சர்வதேச சட்ட நியமங்களுக்கு அமைவாக, இந்தக் கப்பல் அணு ஆயுதங்கள் எதனையும் கொண்டுசெல்லாது; கப்பல்-ஏவுகணைகளை மட்டுமே சுமந்து செல்லும்.
அணுசக்தியால் இயங்கக்கூடிய இந்த நீர்மூழ்கிக் கப்பல் தரைக்கு வராமல் மூன்று மாதங்களுக்கு மேல் தொடர்ச்சியாக கடலுக்கு அடியில் பயணிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2009ம் ஆண்டிலேயே இந்தியாவிடம் இந்தக் கப்பல் ஒப்படைக்கப்படவிருந்தது. பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் அது தாமதமடைந்துவந்தது.
2008ம் ஆண்டு நவம்பரில், இந்தக் கப்பலில் தீயணைப்பு பொறிமுறை தவறுதலாக இயங்கியதால் ஏற்பட்ட விபத்தில் 20 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா, அதன் சொந்தத் தயாரிப்பிலும் அணுசக்தி-நீர்மூழ்கிக் கப்பலொன்றை உருவாக்கிவருகின்றது. இந்த ஆண்டுக்குள் அதுவும் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




8:10 PM
jana

Posted in: 

0 comments:
Post a Comment