flashvortex

Monday, December 26, 2011

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை: இந்தியா வரவேற்பு

இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வரவேற்றுள்ள இந்திய அரசு, இலங்கை அரசாங்கம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து உறுதியான நடவடிக்கைகள் எடுக்கும் என்று நம்புவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
போருக்கு பின்னர் இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை அளித்த பிறகு இந்தியா முதல் முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளது.


இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நல்லிணக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளபடி மனித உரிமை மீறல்கள் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த சுயாதீனமான விசாரணை நடைபெற வேண்டும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.
அப்படியான விசாரணை ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் இடம்பெற வேண்டும் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பல தசாபதங்களாக நடைபெற்ற போரின் காயங்களை ஆற வைக்கும் வகையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன்மூலம் நீடித்திருக்கக் கூடிய சமாதானத்தை ஏற்படுத்த அந்த ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதை இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில், காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்த விபரங்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான தகவல்கள், மும்மொழி கொள்கையை முன்னெடுத்துச் செல்வது, அனைத்து அலுவலங்களிலும் தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிப்பது, உயர்பாதுகாப்பு வலையங்களை குறைப்பது, இராணுவத்தினரிடமுள்ள தனியார் காணிகளை திரும்ப ஒப்படைப்பது, வடமாகாணத்தில் சிவில் நிர்வாகத்தை மீண்டும் கொண்டுவருவது போன்றவை தொடர்பில் எடுக்கப்பட திட்டமிடப்படும் நடவடிக்கைகள் குறித்த விபரங்களை இந்தியா கவனத்தில் எடுத்துள்ளது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சக அறிக்கை கூறுகிறது.
மீள்குடியேற்றம் தொடர்பாக இலங்கை கொடுத்துள்ள வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவதும், பொதுமக்கள் தமது இயல்பான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக இருக்கும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட மோதல்களுக்கு அடிப்படையாக இருந்த காரணங்களை அரசு உணர்ந்து கொண்டு அதற்கு தீர்வு காணும் வகையில், ஒரு அரசியல் தீர்வின் மூலம் ஒருமித்த கருத்துடன் கூடிய நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது என்றும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை முன்னர் பலமுறை இந்தியாவுக்கு வாக்குறுதிகளை அளித்துள்ளது என்றாலும், அர்த்தமுள்ள வகையிலான அதிகாரப் பகிர்வு, உண்மையான நல்லிணக்கத்துக்கும் வழிவகுக்கும் என்பதை இலங்கை அரசு உணர்ந்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தாங்கள் நம்புவதாகவும் இந்தியா கூறியுள்ளது.
அப்படியான ஒரு இணக்கப்பாட்டை நோக்கி இலங்கை செல்வதற்கு இந்தியா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons